Wednesday 7 November 2012

மைனர் செயினும் பாப்பாத்தி குளமும்


கௌதம் டீன் ஏஜ் எட்டி பார்க்க காத்திருக்கும் வயது... சிறு வயது முதலே சுட்டி.. நல்லூர் கிராமத்தின் இளம் சீயான் இவன் தான்... அப்புறம் என்ன இவன் தான் நம்ம கதையோட ஹீரோ னு தெரிஞ்சு போச்சு.. அப்போ அவனை சுத்தி 4 நண்பர்கள் கூட்டம் வேணாமா.. ராஜா. எல்லா குரூப் ல யும் ராஜா னு ஒருத்தன் இருப்பாங்க. அது நம்ம தமிழ்நாட்டோட பாரம்பரிய பேர் ஆச்சே. இவனும் கௌதமுக்கு கொஞ்சமும் சளைச்சவன் இல்லை. எல்லா அலம்பலும் இவனும் சேர்ந்து தான் பண்ணுவான். அப்புறம் 2 டம்மி பீஸ். கணேஷ், சுரேஷ் 2 பேரும் இவங்க கூட தான் இருப்பாங்க. ஆனா இருக்கிற இடமே தெரியாது. கௌதம், ராஜா பண்ற தப்புக்கு மாட்டுறது என்னவோ இந்த 2 அடிமைகள் தான். 4 பேரும் ஒரே பள்ளியில் 11 வது படிக்கிறாங்க. இவங்க எல்லாம் புக்கை எடுத்து படிச்ச நேரத்தை விட குளத்துல குதிச்ச நேரம் தான் அதிகம், எதுக்குன்னு பார்க்குறீங்களா?? அவங்க ஊர் பாப்பாத்தி குளத்துல குளிக்கிறதுல அவ்வளவு இஷ்டம். வேற எங்க குளிச்சாலும் குளிச்ச ஒரு உணர்வே இருக்காது அவங்களுக்கு.. 

அன்றைக்கும் அப்படி தான் 4 பேரும் கிளம்பி குளிக்க போனாங்க. இவங்க கூட குளிக்க வந்த எல்லாரும் ஆடு, மாடு எல்லாத்தையும் குளிப்பாட்டி, ஒரு மூட்டை துணியை துவைச்சு முடிச்சு, குளிச்சு வீட்டுக்கு போனாலும் இவனுக மட்டும் குளத்துல ஊறிக்கிட்டே இருந்தாணுக.. ஒரு வழியா வீட்டுக்கு கிளம்ப மனசு வந்து அவரவர் வீட்டுக்கு போனாங்க. கௌதம் உள்ளே நுழையும் போதே “இவ்வளவு நேரமா டா. சரி. சரி. இங்க வா. தலையை கூட ஒழுங்கா காய வைக்கலை” என சொல்லிக்கொண்டே அவன் கழுத்தில் கிடந்த துண்டை எடுத்து துடைத்து விட்டார் அவன் அப்பா. அப்போது தான் அவன் கழுத்தில் கிடந்த செயினை காணாமல் போனதை கவனித்தார். 

“எங்க டா செயின்?” என வினவ அவன் திரு திருவென விழித்தான். இவ்வளவு சேட்டை பண்ற கௌதமுக்கு அவங்க அப்பானாலே பேஸ்மென்ட் வீக் ஆயிடும். 

“குளத்திலே தொலைச்சுட்டு வந்துட்டியா ராஸ்கல்?பவுன் என்ன விலை விக்குது தெரியுமா? 2 பவுன் செயின் டா அது. ஆசையா உனக்கு வாங்கி போட்டா இப்புடி தொலைச்சுட்டு வந்து நிக்குறியே. என் கண்ணு முன்னாடி நிக்காத. போ. போயி தேடி எடுத்துக்கிட்டு வா “ என அனுப்பி விட்டார். அதன் பின்னும் இவருக்கு மனம் ஆறவில்லை. தன் வேலையாட்களை அழைத்துக் கொண்டு பாப்பாத்தி குளத்திற்கு சென்று தேட ஆரம்பித்தார். 

கௌதம் தன் நண்பர்கள் நால்வரையும் வீட்டிற்கு சென்று அழைத்துக் கொண்டு வர ஒன்றரை மணி நேரம் ஆனது. அது வரை வேலையாட்கள் அனைவரும் குளத்தையே அலசி ஆராய்ந்து பார்த்தும் கண்டு பிடிக்க முடியவில்லை. வர்ற வழியில் சுரேஷ் கூறிய பின் தான் கௌதமுக்கு நினைவுக்கு வந்தது. குளிக்க போகும் முன் செயினை கழற்றிய சட்டை பையில் வைத்தது. வீட்டுக்கு போயி அப்பாக்கிட்ட சொல்லலாம் என போகிற வழியில் குளத்தின் கரையில் அவன் அப்பா நின்று கொண்டிருந்தார். வேலையாட்கள் உள்ளே தேடுவதையும் பார்த்து அதிர்ந்த கௌதம் “இப்போ போயி அப்பாக்கிட்ட சொன்னா நல்லா அடி விழும். இப்போ என்ன செய்யுறது டா” எனக் குழம்பிக் கொண்டிருந்தான். 

அதற்குள் அவன் அப்பா அவனை பார்த்து “டேய் எருமை மாடு!! செயினை தொலைச்சுட்டு எங்க ஊரு சுத்துற!! செயினை தேட சொல்லி அனுப்பினா இவனுகளோட என்ன டா மீட்டிங்.? இவனுக தான் டா உன்னையை கெடுக்கிறது.” என்று மறுபடி அர்ச்சனையை ஆரம்பித்தார்
.
இதுல இருந்து தப்பிக்க என்ன பண்ணலாம்’னு யோசிச்சவன் தீடீரென்று போட்ட சட்டையுடன் குளத்தில் இறங்கினான். ஒரு கால் மணி நேரம் கழித்து மேலே வந்து “செயின் கிடைச்சுருச்சு பா” எனக் கொண்டு வந்து கொடுத்தான். “இவ்வளவு நேரமா நாங்க தேடுறோம். எங்களுக்கு கிடைக்கலை” என யோசித்தவர் “சரி எப்படியோ கிடைச்சுருச்சு. அதுவே போதும்” என நிம்மதியுடன் வீட்டிற்கு கிளம்பினார். ஒண்ணும் தெரியாத அப்பாவி போல முகத்தை வைத்துக் கொண்டு கௌதமும் கிளம்பினான். இப்படி ஒரு சம்பவத்துக்கு பின்னாடியும் கௌதம் பாப்பாத்தி குளத்தையும் விடலை. அவனோட மைனர் செயினையும் கழட்டலை... 

ஜென்ம சாபம்


தேர்தல் நெருங்க நெருங்க மோகன்காந்தி மனதில் பதற்றமும், எதிர்பார்ப்பும் அதிகரித்தது. மீண்டும் மத்தியில் தன் ஆட்சியை நிலைநிறுத்த முடியாமல் போய் விடுமோ என்ற பயம் அதிகரிக்க தன் ஆஸ்தான சாமியாரை சந்தித்து தன் எதிர் காலம் பற்றி கேட்டு அறிய முடிவு செய்தான். மறுநாள் தன் முடிவின் படியே சத்யானந்தா சாமியாரை சந்தித்து தன் எதிர்காலம் பற்றியும், வரவிருக்கின்ற தேர்தல் பற்றியும் கேட்டான்.

“என்ன சாமி!! இந்த தேர்தலும் எனக்கு சாதகமாக தானே இருக்கிறது??”

“இல்லை. உன் ஆட்சி காலம் இத்துடன் முடிவடைகிறது.. இனி உன்னால் எப்போதும் ஆட்சியை பிடிக்க முடியாது”.
“என்ன சொல்றீங்க சாமி ??”

“ஆம். உன் பூர்வ ஜென்ம சாபம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது.”

“சாபமா !! சாபம் முடிஞ்சா நல்லது தானே !!”

“உன் பூர்வ ஜென்ம கதையை சொல்கிறேன். முதலில் அதை பொறுமையாக கேள்”

“சரி சொல்லுங்க சாமி”.

“பூர்வ ஜென்மத்துல நீ ஒரு நாட்டோட அரசன். அப்போது உன் நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் முட்டாள்களாக , அடி மட்ட அறிவே இல்லாது உனக்கு உபத்திரவம் கொடுத்து வந்திருக்கின்றனர். நாளுக்கு நாள் உன் கோபமும், எரிச்சலும் அதிகமாகவே இந்த பிரச்சனையை தீர்க்க உன் நாட்டில் இருந்த ஒரு சக்தி வாய்ந்த முனிவரை சந்திக்க சென்றாய். உன் படையுடன் சென்று கடுந்தவத்தில் இருந்த முனிவரை தவம் கலையும்படி செய்ய அவர் கடும் கோபமுற்றார். 

முனிவர்: ”மதி இழந்த மன்னா!! எதற்காக என் தவத்தை கலைத்தாய்?”

மன்னன்: “மன்னிக்க வேண்டுகிறேன் முனிவரே. நான் வேண்டுமென்று எதையும் செய்யவில்லை. என் நாட்டு மக்களின் முட்டாள் தனமான செயல்களுக்கு அளவில்லாமல் சென்று விட்டது. அதற்கு ஒரு தீர்வு காணவே தங்களை காண வந்தேன்”.

முனிவர்: “உன் நாட்டு மக்களுக்கு மட்டும் அல்ல. உனக்கும் புத்தி என்பது சிறிதும் கிடையாது. இந்த ஜென்மம் மட்டுமில்லாமல் இனி வரும் அனைத்து ஜென்மங்களிலும் நீ நாடாளும் மன்னனாகவும், உன் நாட்டு மக்கள் முட்டாள்களாகவுமே இருப்பார்கள்.”

(சத்யானந்தா சாமியார் மனதில் – உனக்கு ஓட்டு போட்டு ஜெயிக்க வச்சாணுக பாரு கண்டிப்பா இந்த நாட்டு மக்கள் முட்டாள் தான்). 

மன்னன்: “முனிவரே. தயவு கூர்ந்து தாங்கள் என்னை மன்னிக்கணும். தங்கள் தவம் கலைந்ததற்கு நான் மிகவும் வருந்துகிறேன். ஆனால் இந்த சாபத்தில் இருந்து எனக்கு விமோசனம் தாருங்கள் முனிவரே.” 

முனிவர்: “என் சாபத்தின் பலனை நீ அடைந்தே தீர வேண்டும்”.

மன்னன்: “முனிவரே. தங்களை மன்றாடி கேட்கிறேன். என்னை மன்னித்து விமோசனம் தாருங்கள்.”

முனிவர்: “உன் கடைசி ஜென்மத்தில் மட்டும் ஐந்து ஆண்டுகளில் உன் சாம்ராஜ்யம் முடிந்து விடும். அதன் பின் உன் மக்கள் முட்டாள்களாக இருக்க மாட்டார்கள். இது தான் உன் சாப விமோசனம்”.

மன்னன்: ”இதற்கு வேறு வழியே இல்லையா முனிவரே?”

முனிவர்: “இதற்கு மேல் இங்கிருந்து என் கோபத்தை அதிகரிக்காமல் சென்று விடு.”

“இந்த சாபத்தின் படி இது தான் உன் கடைசி ஜென்மம். ஐந்து வருடங்களில் உன் ஆட்சியும் முடிந்தது என்றார் சத்யானந்தா” (நாட்டு மக்கள் இனியும் முட்டாள்களாக இருக்க மாட்டார்கள் என்று மனதில் நினைத்து கொண்டார்).

“இதுக்கு பரிகாரம் எதுவும் இல்லையா சாமி?” என்றான் மோகன் காந்தி.

“அதை நீ அந்த முனிவரை தான் போய் கேட்கணும்!!!”. 

சத்யானந்தா சொன்னது போல் மோகன் காந்தி’யின் கட்சி அந்த தேர்தலில் மிக பெரிய தோல்வியடைந்து ஆட்சியை இழந்தது. சத்யானந்தா பெரிய சாமியார்’னு நீங்கலாம் நினைச்சிடாதீங்க. அவனும் ஒரு டூபாக்கூர் தான். ஜென்ம சாபம்’னு சொன்னதெல்லாம் அவன் அவிழ்த்து விட்ட புளுகு. 

எது எப்படியோ. முட்டாள் என்றும் முட்டாளாக இருக்க மாட்டான். அவனுக்கும் ஒரு நாள் அறிவு வரும். அந்த நாள்’ல அவனை முட்டாள் ஆக்குன எல்லாரும் வீழ்வாங்க. நம்ம நாட்டு மக்களை முட்டாள்களா நினைக்கிற எல்லா அரசியல்வாதிகளும் கடைசியில மக்களாலேயே வீழ்த்தப்படுவார்கள்.